மெட்ரோ ரயிலில் 2018-19-ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் அரசு, மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 31,178 மாணவர்கள் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மெட்ரோ ரயிலைப் பற்றியும், அதில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
டிஎம்எஸ்- இல் இருந்து விமான நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் கல்வி சுற்றுலா மாதந்தோறும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2018-19-ஆம் கல்வியாண்டில் 60 பள்ளிகளில் இருந்து 31,178 மாணவ, மாணவியர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பயன் பெற்றனர். இதில், சென்னை, திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது: 2019-20-ஆம் கல்வியாண்டிலும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்களை மெட்ரோ ரயிலில் கல்விப் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.