சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.வேணுகோபாலை தேசிய சட்ட தீர்ப்பாயத்தின் உறுப்பினராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி எம்.வேணுகோபால் கடந்த 1957-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி பிறந்தார். கடந்த 1989-ஆம் ஆண்டு சார்பு நீதிபதியாக நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரியலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 2007-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். இவரது பதவிக்காலம் வரும் மே 6-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அண்மையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
ஓய்வு பெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, மத்திய அரசு அவருக்கு புதிய பதவி அளித்துள்ளது. அதன்படி அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேசிய சட்ட தீர்ப்பாயத்தின் உறுப்பினராக செயல்படுவார். தேசிய சட்ட தீர்ப்பாயத்தின் தேர்வுக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. நீதிபதி எம்.வேணுகோபாலுடன் சேர்த்து தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் 13 நீதிபதிகளும், 18 தொழில்நுட்ப உறுப்பினர்களும் உள்ளனர். விரைவில் நீதிபதி வேணுகோபால் பணியாற்றும் இடம் உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.