குழந்தைகள் விற்பனை வழக்கில் அமுதா உட்பட 3 பேரை 7 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு நாமக்கல் முதன்னை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா என்ற அமுதவள்ளி(50) என்பவர், கடந்த 25-ஆம் தேதி குழந்தைகள் விற்பனை தொடர்பாக, கட்செவி(வாட்ஸ்அப் )ஒலிநாடாவில் பேசியது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தொடர்புடைய அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், ஹசீனா, அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்பட்டது. வெள்ளிக்கிழமை (மே 3) வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் சாரதா, பிருந்தா உள்ளிட்டோர் விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உட்பட 3 பேரை 7 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு நாமக்கல் முதன்னை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நாமக்கல் முதன்னை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்று அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோடு இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை 7 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.