தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது.
இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகத்தால் கரையோரத்தில் அலையின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து, தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள துறைமுகத்தில் அலை சீறிப் பாய்ந்து மோதுவதால் 10 அடி உயரத்திற்கு கடல் தண்ணீர் எழுகிறது.
இதனைக் காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால், அந்தப் பகுதியில் பாதுகாப்பிற்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று பாம்பன், மண்டபம் பகுதியில் அலையின் வேகத்தால் விசைப்படகுகள் சேதமடைவதை தடுக்க, மீனவர்கள் விசைப்படகுகளை நீண்ட இடைவெளி விட்டு நிறுத்தி வைத்தனர்.