ரத்த அணு குறைபாட்டால் பாதிக்கப்படும் பழங்குடியின சிறார்கள்: மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிப்பு

மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறார்களுக்கு ரத்த அணுக்கள் குறைபாடு தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரத்த அணு குறைபாட்டால் பாதிக்கப்படும் பழங்குடியின சிறார்கள்: மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிப்பு


மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறார்களுக்கு ரத்த அணுக்கள் குறைபாடு தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஏறத்தாழ 9 சதவீதம் பேருக்கு தலசீமியா, ரத்த சோகை உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
இதையடுத்து அச்சிறார்கள் அனைவருக்கும் மாவட்ட மருத்துவமனைகள் வாயிலாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரபணு குறைபாடுகள் காரணமாக ரத்த அணுக்களில் சில பாதிப்புகள் ஏற்படும். அவை நாளடைவில் தலசீமியா, ரத்த சோகை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நெருங்கிய உறவினர்களுக்கு இடையே திருமணம் புரிந்தாலோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலோ இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
இந்த வகை பாதிப்புகள் அதிக அளவில் மலை வாழ் மக்களிடையே காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், குறிப்பாக வளர் இளம் பருவத்தினருக்கு ரத்த சோகை பிரச்னை அதிக அளவில் ஏற்படுவதாகத் தெரிகிறது. அதனை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தேசிய நல்வாழ்வுக் குழுமம் சார்பில் மாவட்டந்தோறும் பழங்குடியின சிறார்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக அத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தன்னார்வ அமைப்புகள் மூலம் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்கென இதுவரை ரூ.3.3 கோடியை தேசிய நல்வாழ்வு குழுமம் செலவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட சிறார்களில் 9 சதவீதம் பேருக்கு ரத்த அணுக்கள் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. அங்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மொத்த சிறார்களில் 21.5 சதவீதம் பேருக்கு தலசீமியா, ரத்த சோகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது கூறியதாவது:
அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதி சென்றடைய வேண்டும்; ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அவற்றில் இத்திட்டமும் ஒன்று. ரத்த அணுக்கள் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விட்டனர்.
போலியோ, பெரியம்மை போன்ற நோய்களை முழுமையாக ஒழித்ததைப் போல ரத்த சோகை, தலசீமியா நோய்களையும் ஒழிக்க முடியும். அடுத்த சில ஆண்டுகளில் அதை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com