திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான, மணப்பாறையை அடுத்த இளங்காக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கமாலுதீன் மகன் முகமது பாரூக் (46) என்பவரை, புதன்கிழமை இரவு தேசிய புலனாய்வு முகமை உதவி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார், இளங்காக்குறிச்சிக்குச் சென்று கைது செய்தனர்.
இதையடுத்து திருச்சி ஐ.ஜி. அலுவலகத்தில் அவரை ஒப்படைத்தனர். மேலும், தேசிய புலானாய்வு முகமை உதவி காவல் கண்காணிப்பாளர் சவுகத் அலி தலைமையிலான போலீஸார் முகமது பாரூக் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
ராமலிங்கம் கொலை குற்றத்துக்கு காரணமாக கமாலுதீன் வீடு உட்பட மொத்தம் 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கமாலுதீன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். தமிழக காவல்துறை இதுவரை 10 பேரை கைது செய்துள்ளது, 6 பேர் தலைமறைவாகியுள்ளனர் என்று தேசிய புலானாய்வு முகமை தெரிவித்துள்ளது.