பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா மீதான புகார் தொடர்பாக 4 வார காலத்துக்குள் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி புலன் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவில் நான் உறுப்பினராக இருந்து வருகிறேன்.
எங்கள் ஊரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்துக்கு கடந்த மார்ச் 4-ஆம் தேதி நான், நண்பர் மணிகண்டனுடன் சென்றேன். அப்போது
அங்கிருந்த பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் என்னையும், மணிகண்டனையும் கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் காரணமாக நாங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். மேலும் இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரை வாங்க மறுத்த போலீஸார், பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டுகின்றனர். எனவே என்னுடைய புகாரின் மீது வழக்குப் பதிவு செய்யவும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் புகாரின் மீது 4 வார காலத்துக்குள் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புதுப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.