திருக்குவளை அருகே கச்சநகரம்- செரநல்லூரில் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட 18 வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் பெரும்பாலானவர்கள் வீடுகளை இழந்து தவித்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய
நடிகர் ராகவா லாரன்ஸ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார். அதன்படி, ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் இலவசமாக ஒப்படைக்கப்பட்டன.
திருக்குவளை அருகேயுள்ள கச்சநகரம்- செரநல்லூரில் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்காக கட்டப்பட்ட 18 வீடுகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் திங்கள்கிழமை ஒப்படைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கிய அவர், பொதுமக்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார்.