சசிகலா மீதான அந்நியச் செலாவணி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

ஜெ.ஜெ தொலைகாட்சிக்கு உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிரான அந்நியச் செலாவணி வழக்கின் விசாரணையை வரும் மே 28-ஆம்
சசிகலா மீதான அந்நியச் செலாவணி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு


ஜெ.ஜெ தொலைகாட்சிக்கு உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிரான அந்நியச் செலாவணி வழக்கின் விசாரணையை வரும் மே 28-ஆம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
ஜெ.ஜெ. தொலைகாட்சிக்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவினர்,  எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு 
சிறையில் இருந்து வருவதால், அந்நியச் செலாவணி வழக்கில் காணொலிக் காட்சி மூலம் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காணொலிக் காட்சி மூலம் 
சசிகலாவிடம் குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் , அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி, அடுத்தகட்ட விசாரணைக்காக  சசிகலாவை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்து காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக அனுமதியளிக்கக் கோரி சசிகலா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக சசிகலாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அந்நியச் செலாவணி வழக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்னிலையில்  திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் ஆஜரானார். காணொலிக் காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் பெங்களூர் சிறையில் இருந்து   சசிகலா ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம்,  சசிகலா காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வேண்டும் என  நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com