மதுரை-விருதுநகர் பிரிவில், திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் வந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை, மதுரை உள்பட 6 கோட்டங்களின் இயக்ககப் பிரிவுக்கு ஒரு சுற்றறிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ளது.
அதில், தகவல் பரிமாற்ற பிரச்னையை சரி செய்ய வேண்டும். ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றத்தில் ஏதாவது இடைவெளி காணப்பட்டால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கடந்த வியாழக்கிழமை சிக்னல் பழுது காரணமாக ஒரே வழித்தடத்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்குநேர் வந்தன. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்னையால், இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு ரயில் நிலைய மேலாளர்கள், கட்டுப்பாட்டு அறை அலுவலர் ஆகியோர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை, மதுரை உள்பட 6 கோட்டங்களின் இயக்ககப் பிரிவுக்கு ஒரு சுற்றறிக்கையை தெற்கு ரயில்வே தலைமை இயக்ககப் பிரிவு மேலாளர் வெளியிட்டுள்ளார். அதில், உயரதிகாரிகள்ஆய்வு செய்து, நிலைய மேலாளர்கள் மத்தியில் தகவல் பரிமாற்றத்தில் பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியது: வெவ்வேறு மாநிலங்களில் இருந்து நிலைய மேலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இங்கு தகவல் பரிமாற்றத்தில் பிரச்னை இருக்கலாம். எனவே, ஆங்கிலம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏதாவது பிரச்னை கண்டறியப்பட்டால், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் பரிமாற்றத்தில் ஏதாவது இடைவெளி காணப்பட்டால், அவர்களை இடமாற்ற செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு பொருத்தமான இடம் கொடுக்கப்படும். பொதுவாக புரிந்துகொள்ளும் மொழியை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்படும். குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.