தனது சகோதரரால் அபகரிக்கப்பட்ட வீட்டை மீட்டுத் தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலசப்பாக்கத்தை அடுத்த கங்காவரம் கிராமம், நவாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் திருப்பதி. இவர் தனக்குச் சொந்தமான வீட்டை தனது சகோதரர் பாஸ்கரனிடம் அடமானம் வைத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். இந்தக் கடனுக்காக பாஸ்கரனிடம் ரூ.2 லட்சம் அசல், வட்டி ரூ.2 லட்சத்தை திருப்பதிக் கொடுத்துவிட்டாராம்.
ஆனாலும், கூடுதலாக வட்டி தர வேண்டும் என்று பாஸ்கரன் கேட்டு வந்தாராம். சில தினங்களுக்கு முன்பு திருப்பதி குடும்பத்தினரை வீட்டில் இருந்து வெளியேற்றிய பாஸ்கரன், வீட்டை பூட்டிவிட்டுச் சென்றாராம். இதனால் மனமுடைந்த திருப்பதி, தனது மனைவி சுமதி, மகள்கள் மீனாட்சி, துர்கா, மகன் விமல்ராஜ் ஆகியோருடன் திங்கள்கிழமை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர், திடீரென மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணையை தனது மனைவி, மகள்கள், மகன் மீதும், தனது மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கவனித்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் திருப்பதி குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.
வீட்டை மீட்டு ஒப்படைப்பு:
இதையடுத்து, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் நவாப்பாளையம் கிராமத்துக்குச் சென்று பாஸ்கரனிடம் இருந்த திருப்பதியின் வீட்டுச் சாவியை மீண்டும் வாங்கிக் கொடுத்தனர்.
பின்னர், தீக்குளிக்க முயன்று மீட்கப்பட்ட திருப்பதி, அவரது மனைவி சுமதி, மகள்கள் மீனாட்சி, துர்கா, மகன் விமல்ராஜ் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தங்களது வீட்டுக்குள் சென்றனர். மேலும், விரைவாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு 5 பேரும் நன்றி தெரிவித்தனர்.