அரசுக்குச் சொந்தமான 89 ரத்த வங்கிகளில் இருக்கும் மருத்துவ சாதனங்களைப் பராமரிப்பதற்கும், அதனை மேம்படுத்துவதற்கும் ரூ.89 லட்சத்தை சுகாதாரத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒவ்வொரு ரத்த வங்கிக்கும் ஆண்டுதோறும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டில் பராமரிப்பு செலவினங்களுக்கு நிதி வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததும் ஒரு காரணமாக முன் வைக்கப்பட்டது.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தூர் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு ஹெச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்படாத ரத்தத்தை செலுத்தியதால் ஒரு சில மாதங்களில் மட்டும் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதுவும் பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
இதற்கு மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் அலட்சியம் காரணமாகக் கூறப்பட்டது. விசாரணையில் அதுபோன்ற தவறு நடக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, 18 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரத்த சேமிப்பு மையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், அந்த மையங்கள் எதுவுமே செயல்படுவதில்லை எனவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
எனவே, ரத்த வங்கி உபகரணங்களை பராமரிப்பதற்கான நிதியை நிலுவையில் வைக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே, தற்போது அரசுக்குச்சொந்தமான 89 ரத்தவங்கிகளில் உள்ள மருத்துவ சாதனங்களைப் பராமரித்து, மேம்படுத்துவதற்காகவும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.89 லட்சத்தை சுகாதாரத் துறை இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.