சிறையில் கைதிகளுக்கு யோகா பயிற்சி  : உயர்நீதிமன்றம் அனுமதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் யோகா பயிறசி வழங்க சேலம் சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதிக்கு அனுமதியளித்து  உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் யோகா பயிறசி வழங்க சேலம் சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதிக்கு அனுமதியளித்து  உத்தரவிட்டுள்ளது. 
தருமபுரி மாவட்டம், இரணியன் அல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். கடந்த 1998-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, செந்தில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள செந்திலை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவரது தாய் அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எனது மகன் 14 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். மேலும் சிறை கைதிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி அளித்து வருகிறார். எனவே, அவரது நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை, சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும் குழுவுக்கு 6 வார காலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என சேலம் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது. 
இந்த உத்தரவை சிறை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அமுதா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வில்  அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளதால், மனுதாரரின் மகன் சிறை கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மனுதாரரின் மகன் சிறை கைதிகள் தங்களது மன அழுத்தங்களிலிருந்து வெளிவரவே யோகா பயிற்சியை அளித்து வருகிறார். இதனை தடுப்பதால் சிறை கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் தான் இழப்பு. எனவே, அவர் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை பயிற்சி வழங்க அனுமதி மறுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் எனக்கூறி விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com