பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான எதிர்காலம் : சிஐஐ தென் மண்டல தலைவர் தகவல்
ராணுவத் தொழில் வழித்தடம், கட்டமைப்பு, துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளின் மூலமாக, பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றார் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தென்மண்டலத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலத்தின் பங்கு மிக அதிகமாக உள்ளது. பொருளாதார பங்களிப்பில் தமிழகம் இரண்டாவது மாநிலமாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, ஜவுளித் தொழில் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பான நிலையில் இருக்கிறது.
தற்போது, ராணுவ தொழில் வழித்தடம், கட்டமைப்பு, துறைமுகங்கள், சரக்கு போக்குவரத்து போன்ற துறைகளில், பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. தொழில்துறை வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ஒட்டு மொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலம் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த உள்ளது.
இதில், வணிகம் செய்வதை எளிதாக்குதல், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் தொடங்குதல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளோம். இதுதவிர, வேலைவாய்ப்பு உருவாக்க அதிக கவனம் செலுத்தப்படும். பணியாளர்கள் அதிகம் தேவைப்படும் தொழில் பிரிவுகளை ஆராய்ந்து, திறன்மிக்கப் பணியாளர்களை அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு.