சிலை கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற ஏற்றுமதியாளர் ரன்வீர் ஷாவின் கடவுச் சீட்டைத் திரும்பத் தரக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக கோயில்களில் இருந்த பழமையான சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி, ரன்வீர் ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதன்படி அவரது கடவுச்சீட்டு, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய கடவுச்சீட்டை திரும்ப தரக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெளிநாட்டில் வசிக்கும் எனது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் எனது கடவுச்சீட்டைத் திரும்ப ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன் புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடவுச்சீட்டைத் திரும்பத் தர சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரன்வீர் ஷா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.