டிடிவி தினகரனின் சுயரூபம் வெளிவந்துள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:-
டிடிவி தினகரனின் பேச்சை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பக்தி கொண்ட தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். டிடிவி தினகரனின் பேச்சை தொலைக்காட்சியில் பார்த்தேன். ஜெயலலிதாவைக் குற்றம் சொல்லும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சியையே ஜெயலலிதா கலைத்தார் என்று பேசுகிறார். ஜெயலலிதா இல்லாத நிலையில் அவரைப் பற்றி குற்றம் சொல்கிறார் என்றால், அது ஜெயலலிதாவுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். இதனை அதிமுக, அமமுக தொண்டர்கள் நினைக்கவேண்டும்.
பத்து ஆண்டுகள் தமிழகத்தின் பக்கமே வராதவர் தினகரன். நாடாளுமன்றம் செல்லாமல் இருந்தவர். அவருக்கு எம்.பி. பதவியை அளித்தது தன்னுடைய வாழ்நாளில் செய்த தவறு எனக் கருதி, தன் வீட்டுப் பக்கமே அவரை ஜெயலலிதா சேர்க்காமல் இருந்தார். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் ஜெயலலிதாவையே குறை சொல்கிறார். இதுதான் தினகரனின் சுயரூபம். தற்போது அது வெளிவந்துள்ளது என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.