மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் மின் தடை காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகள் தலையிடுவது சுயலாப நோக்கத்துக்காகவேதான் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அரசு மருத்துவமனைகள் மீதான நம்பகத்தன்மையை சிதைக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகவும் அந்தச் சங்கம் சாடியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 நோயாளிகள் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு மாதக் கணக்கில் சிகிச்சையளித்துவிட்டு, இறக்கும் தருவாயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு இதுவும் காரணம். மதுரை அரசு மருத்துவமனையில் நேரிட்ட சம்பவம் விபத்தா? கவனக் குறைவால் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் தனியார் மருத்துவமனைகள் தலையிடுவதும், வழக்குத் தொடுப்பதும் ஏற்புடையதல்ல. இதுபோன்ற வழக்குகளைத் தொடுப்பதன் மூலம் அரசு மருத்துவமனைகளின் மீதான மக்களின் நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்று மக்கள், தங்களது சொத்துகளை தாரை வார்த்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் உருவாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.