சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் யாருடன் இருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வன்முறையை யார் செய்தாலும் அது தவறுதான். காங்கிரஸ் கட்சி எப்போதும் வன்முறைக்குத் துணை போகாது. தேர்தல் விதிமீறல் அதிமுகவுக்கு கைவந்த கலை. அதுதான் அவர்களின் தாரக மந்திரமும் ஆகும். பாஜக அல்லாத பிற கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். கமல்ஹாசனுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறித்து காங்கிரஸ் உயர்மட்டக் குழுதான் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்து உள்ளவர்கள், ஓரளவு எங்களுடன் சேர்ந்து செயல்படுகிறவர்கள், தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர்களைப் பெறக்கூடியவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், கமல்ஹாசன் தன்னைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவர் யாருடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும். அவர் நம்மவரா (காங்கிரஸ் ஆதரவு), இல்லை வேறு ஒருவரா என்பதைச் சொல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.