ஜெயலலிதா அரசு தொடர வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி: ஓபிஎஸ்-இபிஎஸ்

அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டி வாக்களித்திருக்கும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயலலிதா அரசு தொடர வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி: ஓபிஎஸ்-இபிஎஸ்


அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டி வாக்களித்திருக்கும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியது. இதில், பாஜக கூட்டணி சுமார் 350 தொகுதிகளில் முன்னிலை வகித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க காத்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இது அதிமுகவுக்கு கடுமையான பின்னடைவாக அமைந்துள்ளது. 

ஆனால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுவதற்கு 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அதிமுக 9 தொகுதிகள் முன்னிலை வகித்து வருகிறது. அதனால், அதிமுக ஆட்சிக்கு பெரியளவிலான பாதிப்பு இல்லை.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர். 

"ஜெயலலிதாவின் நல்லரசு தொடரவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டியும் வாக்களித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !

ஜனநாயகத்தின் இதயமான வணக்கத்திற்குரிய வாக்காளப் பெருமக்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் தங்களது தீர்ப்பினை வழங்கி இருக்கின்றார்கள்.

ஜெயலலிதாவின் உழைப்பால் அமைந்த கழக அரசு ஆற்றி வரும் மக்கள் தொண்டு தொடரும் வண்ணம், தமிழக சட்டமன்றப் பேரவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை’’ சின்னமே தங்கள் இதயம் கவர்ந்த சின்னம் என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், ஜெயலலிதா கட்டிக் காத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கழக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் இதயமார்ந்த நன்றி உரித்தாகுக.

அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன.  கடந்த 5 ஆண்டுகளாக தேச பக்தியும், மக்கள் தொண்டும் தனது இரு கண்களாகக்கொண்டு எழுச்சிமிகு நல்லாட்சியை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது.  

இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இந்தத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்கள். நம் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களே.

தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ் நாட்டை ஆளும் தகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. இடைத் தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில், கழகத்தின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.  வாக்காளப் பெருமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம்.  இன்னும் சிறப்புடன் பணியாற்றி, அனைத்துத் தொகுதி மக்களின் அன்பையும், நல்லாதரவையும் பெறுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.  
    
வெற்றி வாய்ப்பை நாடாளுமன்றத் தேர்தலில் நாம் இழந்திருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கழகத்திற்கு எதிர்காலமே இல்லை என்று ஆரூடம் சொன்னவர்களின் கூற்றை அடியோடு புறக்கணிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பத்திரமாக உள்ளது என்ற உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது.  தவறான வழிகாட்டுதல்களாலும், சுயநலம் கொண்டு தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய கழக உடன்பிறப்புகள் அனைவரும் புரட்சித் தலைவியின் உழைப்பையும், ``எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் கழகம் மக்கள் தொண்டாற்றும்’’ என்று ஜெயலலிதா சூளுரைத்ததையும் நினைவில்கொண்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com