தமிழகத்துக்குத் தேவையான 90-க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்கக் கோரி, மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடியிடம் மனு அளிக்க முதல்வர் பழனிசாமி அளிக்க முடிவு செய்துள்ளார்.
ஏற்கெனவே வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளுடன், புதிய திட்டங்கள் தொடர்பாகவும் மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதைத் தொடர்ந்து, பிரதமருடனான சந்திப்புகளின் போது மாநிலத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்து வருகிறார்.
மீண்டும் பதவியேற்பு: மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக, நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியின் போதோ அல்லது நிகழ்வுக்குப் பிறகோ தமிழகத்தின் நலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை மனுவாக பிரதமரிடம் அவர்கள் அளிப்பார்கள் எனத் தெரிகிறது.
மேலும், மத்திய நெடுஞ்சாலைகள், நீர்வளத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களைச் சந்தித்தும் தமிழகத்தின் சார்பிலான கோரிக்கைகளை முதல்வர் பழனிசாமி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழகம் ஏற்கெனவே வலியுறுத்திய கோரிக்கைகளுடன் புதிய திட்டங்களையும் இணைத்து 90-க்கும் மேற்பட்ட அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, தமிழகத்தில் வறட்சி பாதிப்புக்கு போதிய நிதியை ஒதுக்குவது, விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிப்பதை தடுக்கக் கோருவது போன்ற முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்கள், நூறு நாள் வேலைத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் போன்ற திட்டங்களில் மாநில அரசுக்கு உரிய நிதிகள் வருவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.