தமிழகத்தில் திங்கள்கிழமை 10 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, வேலூர், திருத்தணியில் தலா 112 டிகிரி வெப்பநிலை பதிவானது.
மேலும் திருச்சியில் 108 டிகிரி, கரூர்பரமத்தியில் 106 டிகிரி, சேலம், மதுரை விமான நிலையத்தில் தலா 105 டிகிரி, நாமக்கல், பாளையங்கோட்டையில் தலா 104 டிகிரி, தருமபுரியில் 102 டிகிரி, கோயம்புத்தூரில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
தமிழகத்தில் பல இடங்களில் திங்கள்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சில இடங்களில் அனல் காற்று வீசியது. தமிழகத்தில் செவ்வாய், புதன் (மே 28, 29) ஆகிய இரு நாள்கள் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
தென் வங்கக் கடலில் பெரும்பாலான பகுதிகள், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகளில் மே 29, 30 ஆகிய தேதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது.
மிதமான மழை: ராயலசீமாவில் இருந்து உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் பகுதி வரை காணப்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மழை பதிவு: நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 50 மி.மீ. மழை பதிவானது. நடுவட்டத்தில் 20 மி.மீ., நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நீலகிரி மாவட்டம் கொடநாடு, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.