திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்களுக்கு வைத்துள்ள கோரிக்கையால் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கமும், தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து ஒரு முடிவெடுத்து அதை விநியோகஸ்தர் சங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை (மே 27) அனுப்பியுள்ளன.
இந்தச் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், செயலாளர் பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில் தெரிவித்திருப்பதாவது: வரி விதிப்புடன் கூடிய விதிமுறைகள் கடுமையாக உள்ளன. இந்த வேளையில் பராமரிப்புச் செலவு உயர்வு, சொத்து வரி உயர்வு, வேலையாள்கள் ஊதிய உயர்வு போன்றவை திரையரங்க நிர்வாக நடைமுறைக்கு பெரும் பாரமாக உள்ளன.
எனவே அவற்றை மனதில் கொண்டு, இதனை எதிர்கொள்ளும் விதமாக நமது நிர்வாக நடைமுறையில் ஒரே நிலையான வழிமுறைகளைச் செயல்படுத்தும் வண்ணம் படம் வெளியான முதல் வாரத்தில் நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பங்கும் பிற நடிகர்களுக்கு ஐம்பது சதவீதம் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியான இரண்டாவது வாரத்தில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீத பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 50 முதல் 55 சதவீத பங்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.