உத்தரப் பிரதேசத்தில் கடந்த 23-ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என்று வைத்த பெயர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் அழுத்தம் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.
கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மைனாஸ் பீகம் நரேந்திர மோடியின் ஆதரவாளர் ஆவார். இவருக்கு தேர்தல் முடிவுகள் வெளியான மே 23-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதேசமயம், தேர்தல் முடிவில் பிரதமர் மோடி அமோக வெற்றியைப் பெற்றார். இதையடுத்து, மைனாஸ் பீகம் தனது குழந்தைக்கு நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்று பெயர் சூட்ட விரும்பினார்.
மைனாஸ் பீகமின் இந்த முடிவுக்கு அவரது கணவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் துபையில் உள்ள அவரது கணவரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், பீகம் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்த முடிவுக்கு அவரது கணவர் கடைசியில் பச்சை கொடி காட்டினார். இதையடுத்து, அந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்று பெயர் சூட்டப்பட்டது. பெயர் சூட்டிய சில மணி நேரத்துக்குப் பிறகு நரேந்திர தாமோதர்தாஸ் மோடிக்கு முன் முகமது என்பதைச் சேர்த்தார். இதன்மூலம், அந்த பெயர் முகமது நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்று ஆனது.
இந்நிலையில், பல எதிர்ப்புகள் கிளம்ப மைனாஸ் பீகம் தனது குழந்தையின் பெயரை மாற்றியுள்ளார். எனினும் அந்த பெயரை முழுமையாக மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த மைனாஸ் பீகம், முகமது அட்லாஃப் அலாம் மோடி என்று மோடியின் பெயரை தற்போதும் குழந்தையின் பெயருடன் இணைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
"எனது உறவினர்கள் மட்டுமல்லாது, கிராமத்து மக்களும் என்னை பயமுறுத்துகின்றனர். அதாவது, என் குழந்தையை ஹிந்துக்கள் எடுத்துச் சென்று மதம் மாற்றிவிடுவார்கள் என்று தெரிவிக்கின்றனர். மேலும், எனது மகனுக்கு இஸ்லாமிய சடங்குகள் ஏதும் செய்யப்படாது என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால், எனது குழந்தை எப்போதுமே இஸ்லாமியராக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மோடியை எனது சகோதரராக நினைக்கிறேன். எனது சகோதரரின் பெயரை என் மகனின் பெயருடன் இணைக்க எனக்கு உரிமை இல்லையா?" என்றார்.