திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருப்பது எறும்பூர். பெரிய அளவில் வெளியே தெரியாத எறும்பூர் திடீரென பிரபலடைந்தது.
அதற்குக் காரணம், இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலக் கல்வெட்டுகள்தான். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தின் மூலம், எறும்பூர் என்ற அந்த கிராமம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அதே பெயருடன் விளங்கி வருவதுதான்.
வரலாற்று ஆசிரியர் மற்றும் சில சமூக ஆர்வலர்களின் மூலம் இந்த தகவல் வெளிஉலகுக்குத் தெரிய வந்துள்ளது.
அதாவது 10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் பிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் இருந்து ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த இன்ஸ்கிரிப்ட் மொழியை படித்துப் பொருள் கூறிய வரலாற்று ஆசிரியர் செல்வகுமார், வெண்கொற்ற கொட்டத்து எறும்பூர் என்று அந்த கிராமத்தைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதை எடுத்துரைத்தார்.
இதன் மூலம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊரின் பெயர் எறும்பூர் என்று இருப்பது தெரிய வந்துள்ளது.
அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட 3 கல்வெட்டுகளில், ஒன்றில், நக்கன் மாதனியன் என்பவர் 45 ஆடுகளை தானமாக அளித்ததையும், மற்றொரு கல்வெட்டில் சிவன் கோயில் பற்றியதாக இருந்ததாகவும், அதில் பிரமீஸ்வர உடையார், பார்வதி காமகோட்டமுடைய பெரிய நாச்சியார் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதில் புனரமைப்புப் பணிக்காக சமீபத்தில் இடிக்கப்பட்ட பெருமாள் கோயில் பற்றியும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக செல்வகுமார் கூறியுள்ளார்.