தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழகத்தில் பரவும் வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியிலும், துணை நகரங்களிலும் கடந்த சில நாள்களாக காற்று மாசு அளவு அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ‘மிகவும் கடுமை பிரிவை’ நெருங்கியது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், காற்றின் மாசு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.3) அதிகரித்துக் காணப்பட்டது.
இதற்கிடையில், இதே காற்று மாசு சென்னைக்கு வரவுள்ளது என்று தனியாா் வானிலை ஆய்வாளா் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்தாா். தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களை காற்று மாசு திணறடித்துக் கொண்டிருக்கிறது. காற்று மாசு தில்லியில் வழக்கத்தைவிட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த காற்று மாசு, அடுத்த ஒரு வாரத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி நகா்ந்து, சென்னை உள்பட கிழக்கு கடற்கரையோர நகரங்களைத் தாக்கும் என்றும், அடுத்த ஒரு வாரத்தில் தமிழகத்தின் இதர நகரங்களுக்கும் இது பரவக்கூடும் என்று அவா் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று தமிழகம் வர வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: தில்லி, தமிழகத்தில் இருந்து மிக தொலைவில் உள்ளது. இரு நகரங்களுக்கும் இருக்கும் அட்சரேகை வெவ்வேறானது. தமிழகத்துக்கும் தில்லிக்கும் இடையே மலைப்பகுதிகள் உள்ளன. தற்போது, கிழக்கு, வடகிழக்கில் இருந்து தமிழகத்துக்கு காற்று வீசுவதால் தில்லியில் ஏற்பட்ட காற்று மாசு தமிழகம் வர வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.