வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்: ரஜினிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பழனிசாமி

வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர் என்று நடிகர் ரஜினிகாந்த்திற்கு மறைமுகமாக முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி
தமிழக முதல்வர் பழனிசாமி

விக்கிரவாண்டி: வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர் என்று நடிகர் ரஜினிகாந்த்திற்கு மறைமுகமாக முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் வெள்ளியன்று அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

அதிமுகவின் கூட்டணி மிகுந்த பலம் பொருந்தியது. யாரும் அதனிடம் நெருங்க முடியாது. நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு இடைத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அதிமுக தான் ஆட்சி அமைக்கும்.

தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதைதான் இந்த இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. இடைத்தேர்தல் வெற்றி வித்தியாசத்தின் மூலம் மக்கள் அதிமுக அரசை விரும்புவதை நிரூபித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர். ஸ்டாலினின் எண்ணங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் மூலம் நிராசையாகி உள்ளது.

சிலர் அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், எம்.ஜி.ஆரைப் போன்று இன்னொருவர் திரையுலகில் இருந்து வர முடியாது. வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர். 

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com