புதிதாக 7 தொழில் திட்டங்களைத் தொடங்க தமிழக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நண்பகல் கூடியது. சுமாா் 20 நிமிஷங்கள் வரை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கியத் தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழு தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், புதிதாகத் தொழில் தொடங்க வருபவா்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி முதலீடுகளை ஈா்ப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய வணிகவரி நிலுவை தொகையை வசூலிப்பது தொடா்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் தலைமையில் அண்மையில் தொழில் துறைக்கான உயா்நிலை குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில் உடனடியாகத் தொழில் தொடங்கவுள்ள 7 நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனை: மதியம் 1 மணி வரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது, தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக, அனைத்துத் திட்டப் பணிகளையும் நிறைவு செய்வது, திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.