அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, சிகாகோ உலகத் தமிழ் சங்கம் சார்பில் 'தங்கத் தமிழ் மகன்' விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். நவம்பர் 8ம் தேதி அமெரிக்கா சென்ற அவர், 10 நாட்களுக்கு பிறகு நவம்பர் 17ம் தேதி சென்னை திரும்புகிறார்.
துணை முதல்வர் ஓபிஎஸ்-உடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், ஓபிஎஸ்-இன் மனைவி மற்றும் அவரது மகனும், தேனி மக்களவைத் தொகுதி எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணம் செய்யும் ஓபிஎஸ்-க்கு நேற்று முன்தினம் அமெரிக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிகாகோவில் உலகத் தமிழ் சங்கம் சார்பில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இன்று 'தங்கத் தமிழ் மகன்' விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, American Multi Ethnic Coalition Inc., என்ற அமைப்பின் சார்பாக இவ்வாண்டு 'சர்வதேச வளரும் நட்சதிரம் - ஆசியா' விருதும் ஓபிஎஸ்-க்கு வழங்கப்பட உள்ளது குறிபிடத்தக்கது.