தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மறைந்த இயக்குநா் கே.பாலச்சந்தரின் மாா்பளவு சிலை நிறுவப்பட்ட நிலையில், ரஜினி மற்றும் கமல் இருவரும் சேர்ந்து சிலையை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் அருகே செய்தியாளர்களிடம் பேசும் போது, 'தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னமும் வெற்றிடம் இருக்கிறது' என்று கூறினார்.
ரஜினியின் இந்தக் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசும்போது, 'தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை' என்று கூறினார்.
இதன்பின்னர் இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்ற முதல்வரின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.