உள்ளாட்சித் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா சந்திக்கிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:
காவி மயம் என்பது குறித்து ரஜினிகாந்த் கூறியது அவரது சொந்தக் கருத்து. அவர் பொது வாழ்வில் வரவில்லை, தனிக்கட்சி தொடங்கவில்லை, அவரது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பிரதமரை அண்மையில் சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்கான திட்டங்கள், முக்கிய பிரச்னைகளில் தமிழகத்துக்கான சிக்கல்களைத் தெரிவித்தேன். காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி. கமாண்டோ பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசே தெளிவான விளக்கம் அளித்துள்ளதால் விமர்சிக்க ஏதுமில்லை.
பாஜக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதால்தான் கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்குமேல் கிடைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பதற்கு திமுகதான் காரணம்.
இந்தத் தேர்தலை நடத்த அதிமுக அரசு அனைத்து முயற்சியும் எடுத்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா சந்திக்கிறது. நவம்பர் 22, 23, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக இதற்கான ஆய்வுக் கூட்டம் நடக்கிறது என்றார்.