கரு​ணா​நி​தியை வி‌ஞ்​சி​வி‌ட்​டா‌ர் மு.க.‌ஸ்​டாலின்!

பொதுச்செயலாளருக்கான அதிகாரங்களும் மு.க.ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதன் மூலம் கருணாநிதியையே மு.க.ஸ்டாலின் விஞ்சிவிட்டாரா என்ற  கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
கரு​ணா​நி​தியை வி‌ஞ்​சி​வி‌ட்​டா‌ர் மு.க.‌ஸ்​டாலின்!

பொதுச்செயலாளருக்கான அதிகாரங்களும் மு.க.ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதன் மூலம் கருணாநிதியையே மு.க.ஸ்டாலின் விஞ்சிவிட்டாரா என்ற  கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

திமுகவைப் பொருத்தவரை தலைவர் பதவியைவிட, பொதுச்செயலாளர் பதவியே அதிகாரம் மிக்கதும், உண்மையானதும் ஆகும்.

ஏனெனில்,  தலைவர் பதவி என்ற ஒன்று திமுகவை அண்ணா தொடங்கியபோது ஏற்படுத்தப்படவில்லை.

பெரியாரிடம் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை உருவாக்கி, கட்சியின் கொள்கைகளை விளக்கி 1949 செப்டம்பர் 18-இல் ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் அண்ணா பேசினார். 

அப்போது அண்ணா, "நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் பெரியார் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்தது இல்லை. அதே காரணத்தால்தான் திமுகவுக்குத் தலைவரை ஏற்படுத்தவில்லை. அவர் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியைக் காலியாகவே வைத்திருக்கிறோம். அந்தப் பீடத்தில், நாற்காலியில் வேறு ஆட்களை அமர்த்தவோ அல்லது நானோ அமர விரும்பவில்லை' என்று ஆணித்தரமாகப் பேசினார்.

ஆனால், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அந்தப் பதவியில் 50 ஆண்டுகள் கருணாநிதி இருந்தார் என்பது வரலாறு.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக உள்கட்சித் தேர்தல் வந்தது. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற மறுத்த நெடுஞ்செழியன், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முனைந்தார்.

ஆட்சிப் பொறுப்பு ஒருவரிடமும், கட்சிப் பொறுப்பும் ஒருவரிடமும் இருந்தால் அது சரியாக இருக்காது என்று கருணாநிதி கருதினார். அதனால், பொதுச்செயலாளர் பதவியையும் கைப்பற்ற நினைத்தார்.

ஆனால், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் முடிவில் நெடுஞ்செழியன் கடைசிவரை உறுதியாக இருந்தார்.

அதைத் தொடர்ந்து நெடுஞ்செழியனையும் சமரசம் செய்யும் வகையில் கருணாநிதி மேற்கொண்ட சாதுர்யமான காய்நகர்த்தலால் உருவாக்கப்பட்டதே திமுகவில் தலைவர் பதவி.

1969 ஜூலை 26-இல் திமுகவின் பொதுக்குழுவில் இதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

பொதுக்குழுவுக்கு மறுநாள் நடைபெற்ற திமுகவின் உள்கட்சித் தேர்தலில் தலைவராக கருணாநிதியும், பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும், பொருளாளராக எம்ஜிஆரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுகவின் தலைவராக கருணாநிதியே 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவி என்பது அதிகாரமற்ற பதவி என்பதுபோல் ஆகிவிட்டது. 

திமுகவின் சட்டத்தின்படி, கட்சியினரை நீக்குவது, சேர்ப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுதல், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் ஆகியவை பொதுச்செயலாளர் வசம் இருந்தன. இப்போது அதுவும் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் வசம் வந்துள்ளது.

பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலமின்மையால் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். அதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பணியை வேறொருவரிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. 

பொருளாளராக இருந்து வரும்  துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு விரும்புகிறார். இதற்கு கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு எதுவும் இல்லை.

ஆனால், பொருளாளர் பதவியை அடைவதற்கு டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா என பெரும்படையே வரிசையில் நிற்கிறது. இதில் ஒருவருக்கு பொருளாளர் பதவியைக் கொடுத்தால், அது உள்ளாட்சித் தேர்தலிலும்,  வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் உள்கட்சி மோதலால் பாதிப்பு ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறார்.  

இதனால், பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தையும் தம் வசமே வைத்துக் கொள்ள முடிவெடுத்தார்.

அதன்படி, ராயப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஸ்டாலின் வசம் பொதுச்செயலாளருக்கான அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு ஆபத்து வந்ததால், கருணாநிதி தலைவர் பதவியை உருவாக்கி,  அந்தப் பதவியில் அமர்ந்து, பொதுச்செயலாளர் பதவிக்கான  அதிகாரத்தையும் மறைமுகமாக அவர் கையில் வைத்திருந்தார். 

இப்போது மு.க.ஸ்டாலின் நேரடியாகவே தலைவர் பதவியையும், பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தையும் அடைந்துள்ளார். 

இதன் மூலம் கருணாநிதியையும் விஞ்சிவிட்டார் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com