தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் உள்ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் அறிவுறுத்தலுக்கேற்ப, வருகிற டிசம்பர் மாதத்திற்குள்ளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசும், அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் தேர்தல் தொடர்பான வேலைகளில் மும்முரமாகியுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு, மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டுத் தேர்வை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் வந்த பின்னரே தேர்தல் தேதி உறுதியாகும்.