சென்னை: அயோத்தி தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால்இந்தியாவில் இரத்த ஆறு ஓடி இருக்கும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துளார்.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதனன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டியழைத்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டதில் தி.மு.க.விடம் எத்தனை இடங்கள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்படும். பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல நானும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பார்க்காமலேயே பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி விட்டார். இஸ்லாமியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் தீர்ப்பை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். நாங்கள் அந்தத் தீர்ப்புக்கு எதிராக இருந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து விளையும். பல சிறுபான்மை அரசியல் கட்சிகளே அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், மேற்கொண்டு இந்தப் பிரச்சினை வேண்டாம் என்பதற்காகத்தான்.
எனவே பெரிய நோக்கத்தோடு, நல்ல நோக்கத்தோடு, திறந்த மனதோடு எடுக்கப்பட்ட முடிவு அது. இந்தியா மட்டுமல்ல, உலக சமூகமும் காங்கிரஸினுடைய நிலையை ஆதரிக்கிறது.
காங்கிரஸ் மாற்றுக் கருத்து சொன்னால், இந்தியாவில் இரத்த ஆறு ஓடும். நாங்கள் அதை விரும்பவில்லை. எங்களுடைய நிலையை சிறுபான்மை அரசியல் கட்சிகளும் அந்த சமூகங்களும் ஏற்றுக் கொண்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.