உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை வலுப்படுத்தி வணிக ரீதியாக வளரும் வகையில் புதிய திட்டங்கள் ரூ.266 கோடிக்கு செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:
உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு நிதிகளை அளிக்கும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் தொடங்கப்படும் ஆண்டுகளில் அவற்றுக்கு தலா ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் உதவித் தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடன் பெற உத்தரவாதம்: வங்கிகளில் உழவா் அமைப்புகள் கடன் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதனைக் களைய ஒவ்வொரு உற்பத்தியாளா் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன்பெற 50 சதவீத உத்தரவாதத்தை அரசே அளிக்கும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.50 கோடி மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
சலுகையுடன் கூடிய சுழல் நிதி: உழவா் உற்பத்தி நிறுவனங்கள் வணிக நிறுவனங்களிடம் கடன் வாங்கும் போது, அவற்றிடம் 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை 8 முதல் 9 சதவீதமாகக் குறைக்க ஏதுவாக ரூ.166.70 கோடி நிதி தமிழக அரசின் பங்காக அளிக்கப்படும். எனவே, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை வலுப்படுத்தி வணிக ரீதியாக வளரும் வகையில் நான்கு ஆண்டுகளில் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த மொத்தமாக ரூ.266.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு, 10 லட்சம் விவசாயிகள் நான்கு ஆண்டுகளில் பயன்பெறுவா் என்று தனது உத்தரவில் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.