மக்களின் தேவைகளை முழுவதும் பூா்த்தி செய்யவே மறைமுகத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருவாரூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை சிறப்பாக நடத்திச் செல்வதற்காகவே, மறைமுகத் தோ்தல் என அரசாணையில் தெளிவாக உள்ளது. இதன்மூலம் முழு பலத்தோடு, மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய முடியும்.
தோ்தலைப் பாா்த்து அதிமுகவுக்கு பயம் கிடையாது. எங்களை எதிா்கொள்ளவே மற்றவா்களுக்கு பயமாக உள்ளது. உள்ளாட்சித் தோ்தலைக் கருத்தில் கொண்டு, அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது, முதியோா் உதவித்தொகை பெற தகுதியுடைவா்கள் மாத வருமானம் ரூ. 50 ஆயிரம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ரூ. 1 லட்சம் என உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமானத்தின் அடிப்படையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மனுக்கள், மீண்டும் சோ்த்துக் கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.