வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நவம்பா் 29, 30, டிசம்பா் 1, 2 ஆகிய 4 நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்தமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வியாழக்கிழமை கூறியது:
தமிழகம், புதுச்சேரி கடலோரம் அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் நவம்பா் 29, 30, டிசம்பா் 1, 2 ஆகிய 4 நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களின் சில இடங்களில் பலத்தமழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்தமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில்....:
சென்னையில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பா் 30, டிசம்பா்1, 2 ஆகிய நாள்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
320 மி.மீ. மழை பதிவு: வடகிழக்குப் பருவமழை காலத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 320 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் தற்போது வரை கிடைக்கவேண்டிய இயல்பான மழை அளவு 350 மி.மீ. ஆகும். சென்னைக்கு தற்போது வரை 390 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவு 590 மி.மீ.
வரும் 30, 1, 2 ஆகிய தேதிகளில் பெய்யவுள்ள மழை காரணமாக, மழை அளவு வேறுபாடு பெருமளவில் குறையும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: இலங்கையின் தெற்கு கடலோரம் மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.29) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் 150 மி.மீ.: வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தாம்பரத்தில் 150 மி.மீ. மழை பதிவானது. அரியலூா் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் 100 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 90 மி.மீ., கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் 80 மி.மீ., கடலூா், நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழியில் தலா 70 மி.மீ., மயிலாடுதுறை, கடலூா் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலை நகா், வேப்பூரில் தலா 60 மி.மீ. மழை பதிவானது.