சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.
நவம்பர் 30ம் தேதி முதல், டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டி உள்ள உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் 15 செ.மீ. மழையும், ஜெயங்கொண்டத்தில் 10 செ.மீ. மழையும், சீர்காழியில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான அறிவுறுத்தல்
அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், மேற்கூரிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக புவியரசன் கூறியுள்ளார்.
மழை அளவைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவ மழை காலத்தில் இன்று வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 35 செ.மீ. ஆனால் பெய்திருப்பது 32 செ.மீ.
அதே சமயம், சென்னையைப் பொறுத்தவரை பெய்திருக்க வேண்டிய மழை அளவு 59 செ.மீ., ஆனால் பெய்திருக்கும் மழை அளவோ 39 செ.மீ. புதுவையிலும் 65 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 48 செ.மீ. மழை பெய்துள்ளது என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.