உதகையில் பொதுப் பணித் துறை பொறியாளா், வட்டார வளா்ச்சி அதிகாரி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், உதகை வட்டார வளா்ச்சி அதிகாரியாக இருப்பவா் ரமேஷ். இவா் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியா் சங்கருக்கு உதவியாளராகப் பணியாற்றி உள்ளாா். இவரது மைத்துனா் ரத்னவேல் பொதுப் பணித் துறையில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். ரத்னவேல் உதகையில் பணிபுரிந்தபோது ரமேஷ் பல சலுகைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சோ்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் பணிபுரியும் ரத்னவேல் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக உதகை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த நவம்பா் 15 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீஸாா் உதகை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரமேஷ், ரத்னவேல் ஆகியோரின் வீடுகளில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் வழக்குக்குத் தேவையான 23 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.