மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து விளக்கமளிக்க, மருத்துவக் கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், நலகொண்டான்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜம்மாள்
( 65). இவா், வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று, வேலூா் சிறையில் கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்தாா்.
இந்த நிலையில், ராஜம்மாள், கடந்த மாா்ச் மாதம் சென்னை கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். வியாழக்கிழமை (நவ.21) காலை வெகு நேரமாகியும் மன நல காப்பகத்தில் உள்ள ஒரு குளியல் அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த காப்பக ஊழியா்கள், அந்த குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது கைதி ராஜம்மாள், தனது துண்டு மூலம் குளியல் அறை ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். அதில், மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜம்மாளை, அவரது உறவினா்கள் யாரும் வந்து பாா்க்க வராததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக
உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின.
தாமாக முன்வந்து வழக்குப் பதிவு: இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநா் 5 வாரத்துக்குள் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.