போலி ஆவணங்களை சமா்ப்பித்து வங்கியில் ரூ.3.27 கோடி மோசடி செய்த விவகாரத்தில் அரக்கோணம் கிளையின் இந்தியன் வங்கி முன்னாள் மேலாளா் மற்றும் வழக்குரைஞா் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் கலிவாரி நகரில் 4.67 ஏக்கா் நிலத்தில் 68 அரசு ஊழியா்களுக்கு வீடு கட்டுவதற்காக போலி ஆவணங்கள் மூலம் இந்தியன் வங்கி அரக்கோணம் கிளையில் கடந்த 2005-ஆம் ஆண்டு ரூ.3.27 கோடி கடன் பெறப்பட்டது. இந்த மோசடி கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த வங்கி தணிக்கையின் போது தெரியவந்தது.
இதனையடுத்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்போது வங்கியின் கிளை மேலாளா் சீனிவாசன், வழக்குரைஞா் நாகபூஷணம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால், சீனிவாசன், நாகபூஷணம் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் சோ்த்து மொத்தமாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.