திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையில் ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றது தொடர்பாக 7 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், விளம்பல் பகுதியில் நகர போலீஸார் வாகன தணிக்கையின்போது பைக்கில் வந்த இருவரில் நகைகள் இருந்த பெட்டியை சீராத்தோப்பு சுரேஷ் வீசிவிட்டு தப்பியோடிவிட, மடப்புரம் மணிகண்டன் சிக்கினார். அட்டைப் பெட்டியில் இருந்த 4.25 கிலோ நகைகள் திருச்சி நகைக்கடையில் திருடப்பட்டவை எனத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தப்பியோடிய சுரேஷை பிடிக்க மணிகண்டன், அவரது தாய் கனகவள்ளி மற்றும் நெருங்கிய நண்பர்களைப் பிடித்து திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 3 நாள் விசாரணைக்கு பிறகு மணிகண்டன், சுரேஷ் தாய் கனகவள்ளி ஆகிய இருவரையும் திருச்சி நடுவர் நீதிமன்றம் எண். 2 இல் நீதிபதி திரிவேணி வீட்டில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து நகை, இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இத்திருட்டு சம்பவத்தில் 7 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் நிலையில் அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். திருச்சி மண்டல காவல் துறைத் தலைவர் வரதராஜூ உத்தரவின்பேரில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர் பகுதிகளில் வாகனத் தணிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நகைக்கடை திருட்டில் முக்கிய நபராகக் கருதப்படும் திருவாரூர் முருகனை பிடிப்பது போலீஸாருக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில், முருகனின் அண்ணன் மகன் முரளி (26) திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.