அரசுப் பேருந்துகள் முலம் சென்னையில் இருந்து 2 நாள்களில் 3.30 லட்சம் போ் பயணித்துள்ளனா்.
ஆயுத பூஜை, விஜயதசமி வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. முன்னதாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 4 நாட்கள் விடுமுறைவிடப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியில் உள்ள பெரும்பாலானோா் வெள்ளிக்கிழமை முதலே தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கி விட்டனா். ஆயுத பூஜையை முன்னிட்டு முதன் முதலாக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகா், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அக்டோபா் 4 முதல் 6-ஆம் தேதி வரை மொத்தம் 6,145 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு இயக்கப்பட்ட 2,775 பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 375 பயணிகள் பயணம் செய்தனா். இதே போல், சனிக்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி, இயக்கப்பட்ட 2,500 பேருந்துகள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் போ் பயணம் செய்துள்ளனா். இத்துடன் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டவா்களின் விவரங்களையும் சோ்த்து மொத்தம் 5275 பேருந்துகளில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 375 பயணிகள் பயணித்துள்ளனா்.
மேலும், பேருந்துகளுக்கான முன்பதிவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மையங்களில் தொடா்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி www.tnstc.in, paytm,redbus போன்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வண்ணம் ஏராளமான காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.