சென்னை: கீழடியில் அருங்காட்சியகத்தை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களைக் கொண்டு, அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்துதல் குறித்து, திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பிவருமாறு:
பழந்தமிழரின் சங்ககால நாகரிகத்தின் பெருமைகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை, அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து, அவற்றை மக்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த மூவாயிரத்துக்கும் அதிகமான பொருட்கள், பெங்களூருவுக்கும் பிற இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. அவற்றை மீண்டும் கீழடிக்கே கொண்டு வரவேண்டும். அதற்கேற்ப அருங்காட்சியகத்தை விரைந்து அமைக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.