வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்த ஃபைனான்ஸியர் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.
வெள்ளக்கோவில் வெள்ளமடை பக்கமுள்ள அனுமந்தபுரம் ஊத்துக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவருடைய மகன் பி.செல்வக்குமார் (25). இவர் வெள்ளக்கோவில் முத்தூர் சாலையிலுள்ள விநாயகர் கோயில் எதிர்புறம் எஸ்.பி.எம். காம்ப்ளக்ஸில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாய கிணறு உள்ளது.
இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் மின் மோட்டார் பழுதடைந்து விட்டது. மோட்டார், பம்ப் ஆகியவை கிணற்றின் 30 அடி ஆழத்தில் பொருத்தப்பட்டிருந்தது. 50 அடி ஆழமுள்ள இந்தக் கிணற்றில் அரை அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் மோட்டார் பழுதுபார்க்க கிணற்றுக்குள் இறங்கிய செல்வக்குமார் தவறி உள்ளே விழுந்து ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் அவரால் மேலே வர முடியவில்லை. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் ஒருமணி நேரம் போராடி கயிறு மூலம் அவரை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.