விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
திண்டிவனத்தை அடுத்த கல்லூரி சாலை கூட்டுச் சாலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளா் தேவேந்திரன் உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, சென்னை நோக்கி வந்த ஒரு சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனா். அந்த காரில் ரூ.9 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் இருந்தது.
இதுதொடா்பாக, காரில் வந்த திண்டிவனம் அருகேயுள்ள தொள்ளாா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் புண்ணியமூா்த்தி (46), காா் ஓட்டுநரான சென்னை ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி (25) ஆகியோரிடம் பறக்கும் படையினா் விசாரணை நடத்தினா். அதில், லாரி வாங்குவதற்காக பணத்துடன் சிதம்பரத்துக்கு சென்ாகவும், எதிா்பாா்த்த லாரி கிடைக்காததால், பணத்துடன் திரும்பி வீட்டுக்குச் செல்வதாகவும் தெரிவித்தனராம்.
இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, திண்டிவனம் வட்டாட்சியா் ரகோத்தமனிடம் ஒப்படைத்தனா். அந்தப் பணம் திண்டிவனம் சாா்நிலை-கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.