சென்னை: சீன அதிபரின் வரவேற்பு நிகழ்ச்சியில், விருந்தோம்பலில் தமிழர்களை மிஞ்ச ஆள் இல்லை என்று தமிழக அரசு இன்று நிரூபித்துக் காட்டியது.
அதே சமயம், சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக அதிசயிக்க வைக்கும் வகையில், வெள்ளை வேட்டி- சட்டை, தோளில் துண்டுடன் காரில் இருந்து இறங்கிய போது, அங்கே நின்றிருந்த அனைவருமே ஒரு நிமிடம் கண்களை விரித்துப் பார்த்தனர். தங்கள் கண்களை தங்களாலேயே நம்ப முடியாமல், கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தனர்.
ஆம், சாட்சாத் நம் பிரதமர் நரேந்திர மோடி தான் அது. வெள்ளை வேட்டி சட்டையில் பாரம்பரிய உடையில் மாமல்லபுரத்தில் வந்திறங்கியது அவரேதான்.
மாமல்லபுரத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அர்ஜூனன் தபசு பகுதியில் பிரதமர் மோடி, அங்கே வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்றார். இரு தலைவர்களும் கை குலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வரலாற்று மிக்க சந்திப்பு இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பை முன்னிட்டு இரு நாட்டுத் தலைவர்களும் இன்று காலை சென்னைக்கு வருகை தந்தனர். முதலில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் தற்போது மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.