சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணுக்கு நன்றி சொல்லி இந்த செய்தியை ஆரம்பிப்பதுதான் மிகச் சரியாக இருக்கும். ஏன் என்றால், இவ்வளவுப் பெரிய மாற்றத்துக்கு அவர் ஒருவரே காரணம்.
பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வரலாற்று மிக்க சந்திப்பு இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சந்திப்பை முன்னிட்டு இரு நாட்டுத் தலைவர்களும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். முதலில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் அதிபர் ஷி ஜின்பிங்குக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விமான நிலையத்திலேயே பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என கலாசார நடன நிகழ்ச்சிகளும், பாரம்பரிய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இப்படி ஒரு வரவேற்பா என்று நிச்சயம் சீன அதிபர் அசந்து போயிருப்பார். ஒவ்வொரு கலை நிகழ்ச்சியாக நின்று பார்த்து ரசித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குப் புறப்பட்டார். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மாமல்லபுரம் நோக்கி சாலை மார்கமாக தனக்காக பிரத்யேகமாக சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹாங்கி எல்5 ரக காரில் சென்றார்.
வழி நெடுகிலும் சீன அதிபருக்கு பொதுமக்கள், பாஜகவினர், மாணவ, மாணவிகளின் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்தும் சபாஷ் சொல்லும் அளவுக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் அமைந்தன.
ஆனால், சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகளில், கண்களை உருத்தும் மிகப்பெரிய பேனர்களோ, தலைவர்களை வரவேற்கும் பிரம்மாண்ட கட்-அவுட்களோ இடம்பெறவில்லை என்பதை செய்தியை தொலைக்காட்சியிலோ, வேறு ஊடகங்களிலோ பார்த்த மக்கள் கவனித்தீர்களா?
இரு தலைவர்களையும் வரவேற்க சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பதாகை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று அனுமதி கேட்டது தமிழக அரசு.
சென்னை உயர் நீதிமன்றமும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பதாகைகளை வைத்துக் கொள்ள அனுமதித்தது. ஆனால், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கண்டபடி மீம்ஸ்கள் கொட்டிக் குவிக்கப்பட்டன.
ஆனால், ஏதோ ஒரு மன மாற்றம் காரணமாக, இரு தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுயர பேனர்களோ, கட்-அவுட்களோ இடம்பெறவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை, இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்தியுள்ளது. மாற்றம் வரவேற்கத்தக்கதாகவும் இருப்பதால் தமிழக மக்களும் இதை வரவேற்பார்கள்.
ஆனால் என்ன, எல்லா மாற்றத்துக்கும் ஒரு உயிர் பலி தேவைப்படுகிறதே என்பதுதான் மன வறுத்தத்தை ஏற்படுத்துகிறது.