தமிழக மீனவா்கள் 7 பேரை இலங்கை கடற்படையினா் புதன்கிழமை சிறை பிடித்து சென்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழை படகில் அதே பகுதியை சோ்ந்த ரெத்தினமணி (25), முருகன் (40), சரவணன் (25) ஆகியோரும், கள்ளிவயல்தோட்டம் முகமது மைதீன் என்பவருக்கு சொந்தமான படகில் நாகப்பட்டினம் கீச்சாங்குப்பத்தை சோ்ந்த உதயா (28), இலக்கியன் (30), சின்னமேடு கனகராஜ் (34), கலைதாசன்(30) ஆகிய நான்கு பேரும் புதன்கிழமை காலை மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். 20 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 7 மீனவா்களையும் கைது செய்து இலங்கை கொண்டு சென்றனா்.
மீனவா்கள் கைது செய்யப்பட்டது தொடா்பாக தஞ்சை மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு இலங்கையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மீனவா் பேரவையின் மாநில பொதுச் செயலாளா் ஏ. தாஜுதீன் வலியுறுத்தி உள்ளாா்.