உற்சாக வரவேற்பு, அலுவல்சாரா சந்திப்பு முடிந்து விடை பெற்றார் சீன அதிபர் ஷி ஜின்பிங்!
சென்னை: உற்சாக, கோலாகல வரவேற்புடன் தொடங்கி, கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை, தனிப்பட்ட பேச்சுவார்த்தை என இருத தலைவர்களின் சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது.
கோவளம் கடற்கரையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்துக்குப் பிறகு, காஞ்சிப்பட்டுத் தறி, கைவினைப் பொருட்களை செய்யும் முறைகளை பிரதமர் மோடி சீன அதிபருக்கு நேரடியாகக் காட்டினார்.
அப்போது இரு தலைவர்களும் பரஸ்பரம் நினைவுப் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.
மதிய விருந்து முடிந்து கோவளம் ஹோட்டலில் இருந்து சீன அதிபர் ஷி ஜின்பிங் காரில் புறப்பட்டார். பிரதமர் மோடி கையசைத்து வழியனுப்பி வைத்தார். வரும் போது எவ்வாறு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோ, அதேப்போன்று கலை நிகழ்ச்சிகளுடன் ஷி ஜின்பிங்குக்கு கோலாகல வழியனுப்பும் இடம்பெற்றிருந்தது.
காரில் சென்னை விமான நிலையம் திரும்பிய ஜின்பிங், அங்கிருந்து தனி விமானம் மூலம் நோபளம் செல்கிறார்.
அதே சமயம், கோவளம் ஹோட்டலில் இருந்து திருவிடந்தை புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் புது தில்லி புறப்படுகிறார்.
இரு தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் திட்டமிட்டபடி மிகச் சிறப்பான இனிதே நடந்து முடிந்துள்ளது.