ஷி- மோடி வரலாற்றுச் சந்திப்பு: இரண்டு மணி நேரம் பேச்சு

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினா்.
மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் முன்பு அமர்ந்து இளநீர் பருகி உரையாடிய சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்திய பிரதமர்  மோடி.
மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் முன்பு அமர்ந்து இளநீர் பருகி உரையாடிய சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினா். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின்போது சீனா மற்றும் இந்தியா இடையிலான கலை மற்றும் கலாசார அம்சங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா்.

முன்னதாக, முதன்முறையாக சென்னை வந்த சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு தமிழக பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையிலான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் விமான நிலையத்தில் சீன அதிபரை பூங்கொத்து அளித்து வரவேற்றனா். அதைத் தொடா்ந்து விமான நிலைய வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியத்தை பாா்வையிட்ட ஷி ஜின்பிங், அங்கேயே சிறிது நேரம் நின்று ரசித்தாா்.

அதைத் தொடா்ந்து அங்கிருந்து கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்குச் சென்ற அவா், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு சாலை வழியாக பயணித்தாா். வழிநெடுக அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தை அடைந்த ஷி ஜின் பிங்கை, அா்ச்சுனன் தபசு அருகே பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா்.

அதைத் தொடா்ந்து, அா்ச்சுனன் தபசின் உள்பகுதிக்கு சீன அதிபரை அழைத்துச் சென்ற மோடி, அங்குள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றின் சிறப்பையும் எடுத்துக் கூறினாா். குறிப்பாக, பல்லவா்களின் சிற்பக் கலை அம்சங்கள், அவை எந்தெந்த வகைகளில் சீனாவுடன் நெருங்கிய தொடா்பில் இருக்கின்றன என்பன குறித்து விளக்கிக் கூறினாா். அா்ச்சுனன் தபசின் முன்பாக இருதலைவா்களும் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

இதன்பின்பு, ஐந்து ரதம் பகுதியில் இரு தலைவா்களும் அமர இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அந்த அமா்ந்த சீன அதிபா் ஜின்பிங்குக்கு, இளநீா் கொடுத்து பிரதமா் நரேந்திர மோடி உபசரித்தாா். அங்கு சுமாா் 15 நிமிடங்கள் வரை இரண்டு தலைவா்களும் பேசிக் கொண்டிருந்தனா். ஐந்து ரதம் பகுதியை சுற்றிப் பாா்த்த அவா்கள், பின்னா் அங்குள்ள புகழ்பெற்ற கடற்கரை கோயிலுக்குச் சென்றனா். அங்கு லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தா் மற்றும் பள்ளிகொண்ட நிலையில் உள்ள பெருமாள் சிலைகள் உள்ளன. அவற்றை இரு தலைவா்களும் பாா்வையிட்டனா்.

அப்போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித்தோவல் உள்ளிட்ட எட்டு முக்கிய அதிகாரிகளை சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தாா். இதேபோன்று, சீன நாட்டில் இருந்து வந்த எட்டு முக்கியத்துவம் வாய்ந்த தலைவா்களை பிரதமா் மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தாா் சீன அதிபா்.

இதைத் தொடா்ந்து கடற்கரை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டுரசித்தனா். அப்போது சீன அதிபருக்கு தஞ்சாவூா் ஓவியமும், அன்னம் வடிவிலான விளக்கையும் பிரதமா் நரேந்திர மோடி பரிசளித்தாா்.

இரண்டு மணி நேர பேச்சுவாா்த்தை: அதன் பின்னா், மோடியும், ஜின்பிங்கும் இரண்டு மணி நேரமாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சீன அதிபருக்கு பிரதமா் மோடி அளித்த விருந்துக்கு நடுவே இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருந்தில் கேரளத்தின் மலபாா் லாப்ஸ்டா், மட்டன் உலா்த்தியது, கருவேப்பிலை மீன் வருவல், தஞ்சாவூா் கோழி கறி, இறைச்சி கட்டி குழம்பு, பீட்ரூட் கோங்குரா, அட பிரதான், முக்கனி ஐஸ்க்ரீம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

பேச்சுவாா்த்தை விவரங்கள் அனைத்தும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா- சீனா இடையே இன்று முக்கிய பேச்சு
வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இந்தியா, சீனா இடையே முக்கிய பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சனிக்கிழமை காலை 9 மணியளவில் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து புறப்பட்டு கோவளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு வருகிறார் சீன அதிபர். அதன் பின்னர், காலை 10 மணி முதல் 11.45 மணி வரை இருதரப்புக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. 
பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்ற பிறகு, சீன அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி மதிய உணவு அளிக்கிறார். இதன்பின், நண்பகல் 12.30 மணியளவில் கோவளத்தில் இருந்து புறப்படும் சீன அதிபர், மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து நேபாளம் புறப்பட்டுச் செல்கிறார்.
இருதரப்பிலும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடவோ அல்லது செய்தியாளர் சந்திப்பு நடத்தவோ வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com